3/13/2006

விட்டில் பூச்சி!

வின்மீன்கள் உலவுகின்ற
இத்தமிழ்மண வானில்
எரிகல்லாய் எரி(றி)ந்து
வீழவிரும்பவில்லை

தமிழ்மணம் வீசும்
நந்தவனத்தில்
சிறுவிட்டில் பூச்சியாய்
சிறகடித்து பறந்திட
விரும்புகிறேன்.

விட்டில் பூச்சிகள் இவை யாரையும் பொதுவாகத் தாக்காது, கடிக்காது, விஷத் தன்மையற்றவை. இவற்றால் வேகமாகவும் பறக்க இயலாது. இவை ஈ, கொசுக்களைப் போன்று கொடிய வியாதிகளைப் பரப்புவதும் கிடையாது.

தமிழுக்கும் எனக்குமான தொடர்பு தாய்க்கும், குழந்தைக்குமான தொடர்பாய் இருந்தாலும்., எழுத்துக்கும் எனக்குமான தொடர்பு அவ்வளவு பெரிதானதாக சொல்லிக் கொள்ளவதில்லை... சிறு வயதில் சில வரலாறுகளையும், காப்பியங்களையும் என்னுடைய அம்மா படிக்கக் கேட்டது தவிர எனக்கென்று ஒரு தேடலும் இருந்ததில்லை. சில நேரங்களில் நானாக ஆர்வபட்டு படிக்க முயன்ற பொழுதும், எனக்கென்றே எனக்குள் இருக்கும் சிற்றறிவினால் எந்தவொரு எழுத்தையும் சுதந்திரமாக அணுக முடிந்ததில்லை.
இவை பழுப்பு நிறத்தில் 7/16" இருந்து 9/16" வரை வளரும். மிருதுவான, நீள் வடிவமான உடலினைக் கொண்டது. பொதுவாக இவை வசந்தகால மாலைப் பொழுதினில் காண கிடைக்கும். இவற்றின் வாழ்க்கை காலம் 3 நாட்களிலிருந்து 1 வாரம் வரை இருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

இவ்விட்டில் பூச்சியின் காலம் சிறிதளவே என்பதனால் என்னைப் பற்றி நீண்டதொரு விளக்கம் தேவை இல்லை. எதற்காகவோ எதையோத் தேடி அலைந்த பொழுது கண்ணில் பட்டது தமிழ்மணத்தின் தலைவாசல். இங்கு கூட நான் எதையும் குறிப்பிட்டு தேடியதில்லை. தலைவாசலின் வழியாக வீட்டினுள் நுழையும் காற்று சிறிது சாளரத்தின் வழியாகவும் சிறிது தாழ்வாரத்தின் வழியாகப் புகுந்து சமையலறைக்குச் சென்று அங்கே சமைக்கப் படும் உணவின் வாசத்தையும் தோட்டத்தில் இருக்கும் தொழுவத்தின் சாண வாசத்தையும் எடுத்துக் கொண்டு பொதுவில் கலந்து விடும். அதில் சிலருக்கு சாணத்தின் வாசம் பெரியதாகவும், சிலருக்கு சமையலின் வாசம் பெரியதாகவும் தெரியும். இப்படித்தான் எழுத்துக்களும் இங்கே இனம் பிரிக்கப்பட்டிருந்தது.

தமிழ்மணத்தின் தலைவாசலில் "குழலி"யின் பெயரால் கவரப்பட்டு "கடலூர் காட்டானின் களத்து மேட்டிற்கு" முதல் முறை சென்றேன். அதுவே தமிழ்மணம் என்னும் பெருவெளியில் கொண்டுவந்து விட்டது. களத்துமேட்டிற்கான உக்கிரம்:-) (குழலி மன்னிப்பாராக!) தாங்காது சிறிது காற்று வாங்க சுரேஷ் அண்ணாச்சியின் "தேம்ஸ் நதிக்கரையோரம்" உலாவினேன். பின்னர் குழலி, மற்றும் சுரேஷ் அண்ணாச்சியின் உதவியினாலும் ஊக்கத்தினாலும் தமிழில் பின்னூட்டமிட கற்றுக் கொண்டேன். இடையே "காசியின் உன் கோடு, என் கோடு தனி(யூனி)கோடு" பதிவின் மூலம் யூனிகோடு என்றால் என்ன என்பது ஓரளவு புரிந்தது. பின்னாளில் அது ஒரு உப்பு சப்பில்லாத பொட்"டீ"கடை ஒன்றைத் திறந்து "ஈ"யடிக்கும்படி ஆகிவிட்டது. என்னை வலை பதிய ஊக்குவித்த குழலி மற்றும் சுரேஷ் அண்ணாச்சி அவர்களுக்கு எனது நன்றிகள்.

இவற்றின் உடலிலிருந்து வரும் ஒளிவெள்ளமானது தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் முழு சக்தியும் ஒளிக்கீற்றாக வெளியேற்றப்படுவதாகத் தெரிந்தாலும், வெறும் 10% மட்டுமே ஒளியாகவும் பிற 90% வெப்பசக்தியாகவும் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இவற்றின் பின் பகுதியிலிருந்தே ஒளியானது வெளிக் கொணரப்படுகிறது. இதன் பின் பகுதி, கிடைக்கற்கரிய இரசயானங்களான லூசிஃபெரின், லுசிஃபெரஸ் போன்றவற்றை உள்ளடக்கியது. அதன் உடலில் உள்ள அடினோஸின் ட்ரை ஃபாஸ்பேட் மாற்றும் சக்தியாக இருந்து லூசிஃபெரின், லுசிஃபெரஸ் கலவையை ஒளி சக்தியாக மாற்றுகிறது. அனைத்து உயிரின செல்களிலும் ஏடிபி இருக்கின்ற காரணத்தால் விட்டில் பூச்சியின் இரசாயனக் கலவையை மனித உடலில் ஏற்றும் பொழுது, செல்களுக்குள் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் புற்று நோய்க்கான அறிகுறிகளையும் இன்ன பிற மருத்துவ பயன்பாட்டிற்கும் இவை உதவுகின்றன.

நான் என்னதான் குப்பையை கிளறினாலும் என்னை ஊக்குவித்த வாத்தியார் தருமி , அப்பிடிபோடு அக்கா, முத்துகுமரன் மற்றும் கடைக்கு வந்து போன பலருக்கும் எனது நன்றிகள். இதுவரை பின்னூட்டங்கள் மட்டுமே அதிக அளவில் (இடுகைகளை விட) எழுதிய என்னை பிடறியில் தட்டி, இனி தப்பிக்க இயலாத வண்ணம் நட்சத்திரமாக்கி விட்ட "மதி"க்கு எனது நன்றிகள்(நற நற..)

இது மட்டுமல்லாமல் கழிவு நீர் சுத்திகரிப்பு, சுற்று சூழல் பாதுகாப்பு மற்றூம் பன்றிகளின் உயர் இரத்தாழுத்தை போக்குவதற்கும் விட்டில் பூச்சிகள் தேவையாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் வின்வெளித்துரையிலும் இதன் பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது.

இவற்றின் இரசயானங்களை செயற்கையான முறையில் உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால், வளர்ந்த நாடுகள் பல இவற்றை பெருக்கம் செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன.

இந்த ஒருவார காலத்திற்கு தொடர்ந்து எழுத வேண்டும். என்னை எழுத அழைத்த அனைவருடைய, நம்பிக்கையை பொய்ப்பிக்காத வண்ணம் தினமும், வின்மீனாக மின்ன இயலாவிட்டாலும் சிறு விட்டில் பூச்சியாகப் பறந்து சில சிறார்களை மகிழ்விக்கும் பொருட்டு ஏதாவது எழுதி இந்த ஒரு வாரத்தை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

அதனால் அனைவரும் பொட்"டீ"கடைக்கு இந்த ஒரு வாரம் மட்டும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...:-).

பின்குறிப்பு: எனக்கு இலக்கணமும் தெரியாது, இலக்கியமும் தெரியாது - தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அதனால் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் :-)). ஆனால் வாழ்க்கையை உற்று நோக்கி அறிந்திருப்பதால்., அவைகளை வைப்பேன் இங்கு.

30 comments:

said...

பின்னூட்டங்களில் சூட்டை கிளப்பும் ஆட்களில் ஒருவராக கோலேச்சிய நீவீர் நட்சத்திரமாக கோலேச்ச வருக வருக என்று வரவேற்கிறேன்.....

(ஆஸ்ரேலியாவில் என்னய்யா பண்ற?)

said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: கோ.இராகவன்

வாங்க பொட்டீக்கடை.....நட்சத்திர வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.

11.59 20.3.2006

said...

முதலில் நட்சத்திரத்துக்கு வாழ்த்து.

குறிப்பாக ஒஸ்ரேலியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நட்சத்திரமாக இருப்பதால் கூடுதலான ஓர் ஈர்ப்பு.

Anonymous said...

எழுதிக்கொள்வது: தருமி

அப்பாடாஇ பிடறியில் அடி விழுந்துச்சா...அதான நாங்க ஒழுங்கா சொன்னாகூட கேக்கிறதில்லை. அடி மாதிரி அண்ணன் தம்பிகூட உதவ மாட்டாங்கன்னு சொல்றது சரியா போச்சா? ஒழுங்கா ( i அநயnஇ சநபரடயச) எழுதுங்க இந்த வாரம்; எழுதிக்கிட்டே இருங்க அதுக்குப் பிறகும்...வாழ்த்துக்கள்

13.28 20.3.2006

said...

இந்தவாரம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்! இந்தப்பதிவு வித்தியாசமானதாக இருந்தது.

நீங்கள் விட்டில் பூச்சி என்று சொல்லுவது மின்மினியையா? ஏனெனில் ஒளிவீசும் (லூசிஃபெரின்) பூச்சியாக நான் அறிந்தது மின்மினி. விட்டில் விளக்கொளியை நாடி விழும் என்று படித்துள்ளேன். ஆனால் மின்மினி அப்படிச்செய்யுமா என்று தெரியவில்லை?

விட்டிலா? மின்மினியா? அல்லது இரண்டும் ஒன்றா? :)

Anonymous said...

எழுதிக்கொள்வது: துளசி கோபால்

அடட, நம்ம பக்கத்தூட்டுக்காரு! வாங்க வாங்க வாங்க.
எப்படி இருக்கீங்க? கலக்குங்க பாக்கலாம்.
வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
துளசி

20.23 20.3.2006

said...

தமிழினி,
முதன் முறையாக பொட்"டீ"கடை பக்கம் வந்ததற்கு நன்றி.
வரவேற்பெல்லாம் பலமா கொடுத்திருக்கீங்க...கவுத்துடதீங்க சாமியோவ்...

மணியன்,
நீங்களும் மொத தடவையா வந்திருக்கீங்க... உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

கோ. இராகவன்,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

said...

வசந்தன்,
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

"குறிப்பாக ஒஸ்ரேலியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நட்சத்திரமாக இருப்பதால் கூடுதலான ஓர் ஈர்ப்பு."

கூடுதலான நன்றிகள்! :-)

தருமி,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!
நீங்க தான் என்னுடைய ஒறே ரெகுலர் கஸ்டமர் மற்றும் ஒரே தன்மான தலைவர் :-) நீங்களே சலிச்சிக்கிட்டா எப்படி?

தங்கமணி,
தங்களுடைய வரவிற்கும் வழ்த்துக்களுக்கும் நன்றி!

"இந்தப்பதிவு வித்தியாசமானதாக இருந்தது."
:-)

"விட்டிலா? மின்மினியா? அல்லது இரண்டும் ஒன்றா? :)"

எனக்கும் இந்த சந்தேகம் தான்... கூகிளில் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை.
மின்மினிப் பூச்சிகள் என்றே தொடங்கினேன் ஆனால் விட்டில் பூச்சியாக முடித்து விட்டேன்.
தங்களின் தகவலின் படி மின்மினிப் பூச்சிகள் என்பதே சரியாக இருந்தாலும் தமிழ்மன விளக்கைத் தேடி வந்து "மடியும்" விட்டில் பூச்சியாகவே நான் இருக்கிறேன்.

"நீங்கள் விட்டில் பூச்சி என்று சொல்லுவது மின்மினியையா? ஏனெனில் ஒளிவீசும் (லூசிஃபெரின்) பூச்சியாக நான் அறிந்தது மின்மினி. விட்டில் விளக்கொளியை நாடி விழும் என்று படித்துள்ளேன்."

தகவலுக்கு நன்றி!

said...

எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள். கலக்குங்க. தவறாமல் வந்துடறேன்.

//**ஆனால் வாழ்க்கையை உற்று நோக்கி அறிந்திருப்பதால்., அவைகளை வைப்பேன் இங்கு. **// இது போதாதா..அருவி மாதிரி கொட்டிட மாட்டீங்க :-).

said...

துளசியக்கா...இப்போ தான் உங்களுக்கு வழி தெரிஞ்சிதா!:-)
நா நல்லா இருக்கேன்! நீங்க எப்பிடி இருக்கீங்க...
வாழ்த்துகளுக்கு நன்றி!

சிவா,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்!தங்களுடைய ஆதரவை அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.

said...

வானத்து நட்சத்திரமாக தமிழ்மணத்தின் விடிவெள்ளியாக ஜொலிக்க வாழ்த்துக்கள்.

said...

கலக்குங்க இந்த வாரம்!

அப்படியே அண்ணனுக்கு ஏலக்காய் போட்ட ஒரு ஸ்பெசல் மசாலா டீ!!!

:)

//ஆனால் வாழ்க்கையை உற்று நோக்கி அறிந்திருப்பதால்., அவைகளை வைப்பேன் இங்கு..//

கடைய பரப்புங்க... உங்க கடைல டீயும் வடையும் தின்னுக்கிட்டு படிக்க நாங்க இருக்கோம்...

said...

தம்பி., பட்டைய கிளப்புங்க. வாழ்த்துக்கள்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: Sudharsan.Gopal

நட்சத்திரத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.உங்கள் பணி சார்ந்த கட்டிடக்கலை பற்றியும் தற்போது இருக்கும் ஆஸ்திரேலியா பற்றியும் எழுதுவீர்கள் என நம்புகிறேன்(உஙளுக்கு மிகவும் பிடித்த அரசியலைத் தவிர).

17.59 20.3.2006

said...

பொட்'டீ'கடை சத்யா முதலில் வாழ்த்துகள் நட்சத்திரமானதற்கு, இரண்டாவது வாழ்த்தையும் பிடியுங்கள் மிகவும் வித்தியாசமான முறையில்(பூச்சி தகவல்களை இடையே இடையே கலந்து) கவர்ந்திழுக்கும் படி எழுதப்பட்ட இந்த பதிவு...

//எனக்கு இலக்கணமும் தெரியாது, இலக்கியமும் தெரியாது - தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அதனால் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் :-)). ஆனால் வாழ்க்கையை உற்று நோக்கி அறிந்திருப்பதால்., அவைகளை வைப்பேன் இங்கு.
//
இலக்கணம், இலக்கியம் தர்க்க சாத்திரங்கள் எல்லாம் தெரிந்து போலியாக எழுதும் பெரிய அனுபவசாலி எழுத்துகளை/எழுத்தாளர்களை விட இது எதுவுமே தெரியாமல் போலித்தனமில்லாமல் எழுதும் உங்களைப் போன்றோர்களின் எழுத்து மிக மிக உயர்வானதும் போற்றத்தக்கதும்.

கலக்குங்க சத்யா

said...

வருக. வருக. நல்வாழ்த்துக்கள். எதிர்பார்ப்புடன்....

said...

இளந்திரையன்,

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

இளவஞ்சி,

நன்றி,
உங்களுக்கு இல்லாததா ...ஜோரா சாப்பிட்டு போங்க!

"அப்படியே அண்ணனுக்கு ஏலக்காய் போட்ட ஒரு ஸ்பெசல் மசாலா டீ!!!"

கூடவே கொஞ்சம் இஞ்சியையும் சேர்த்துக்கோங்க...

அப்டிபோடு அக்கா,

வாழ்த்துக்களுக்கு நன்றி!
"பட்டைய கிளப்புங்க"

கிளப்பிட்டா போச்சு...:-)

said...

சுதர்சன்,

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
"உங்கள் பணி சார்ந்த கட்டிடக்கலை பற்றியும் தற்போது இருக்கும் ஆஸ்திரேலியா பற்றியும் எழுதுவீர்கள் என நம்புகிறேன்"
கட்டாயம் நீஙள் எதிர்பார்ப்பது கிடைக்கும். அதுக்கு தானே கடையே போட்டிருக்கேன்.

பாரதி,
வரவேற்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

குழலி,
மிக்க நன்றி...
"எனக்கு இலக்கணமும் தெரியாது, இலக்கியமும் தெரியாது - தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அதனால் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் :-)). ஆனால் வாழ்க்கையை உற்று நோக்கி அறிந்திருப்பதால்., அவைகளை வைப்பேன் இங்கு."
நா உண்மைய தானே சொன்னேன்...:-)
இன்னொரு உண்மையும் சொல்லலாம்...ஆனா எல்லோரும் என்னை கல்லால அடிப்பீங்க...அதனால இப்போதைக்கு அது ரகசியமாகவே இருக்கட்டும்.

"உங்களைப் போன்றோர்களின் எழுத்து மிக மிக உயர்வானதும் போற்றத்தக்கதும்"
ஏற்கனவே நான் மிதப்பில் இருக்கிறேன். நீங்க வேற இன்னும் கொஞ்சம் ஏத்தி விடறாப்ல தெரியுது.:-))

said...

உருண்டோடும் நாளில்
கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா?
இருள் வேண்டுமா?

இதில் இருள் கண்டு பயந்த போது
ஒளி கொடுக்க வரும் விட்டில் பூச்சியே வருக வருக!!!

பயணம் இனிதே ஆகட்டும்.

said...

சிவனடியார்,
தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி! தங்கள் வரவேற்புரையில் நெகிழ்ந்து போனேன்.:-)

said...

பொட்டிக்கடை,
மனமார்ந்த வாழ்த்துக்கள் .உங்க கடையிலிருந்து சூடான சுவையான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!

said...

இந்த வாரம் தாங்கள் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். தங்கள் படைப்புகளையும் ஆஸ்திரேலிய அனுபவங்களையும் படிக்க ஆர்வம் உள்ளவனாக உள்ளேன்.

said...

ஜோ...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

"உங்க கடையிலிருந்து சூடான சுவையான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!"

எல்லோரும் இதையே தான் கேட்டிருக்காங்க...கடைய மாத்த வேண்டியது தான் :-)என்னால் இயன்ற வரை "டீ"யடித்துக் கொடுக்கிறேன்.

கைபுள்ள,

வாங்க வாங்க...எப்பிடி இருக்கீங்க. மொத மொரயா வந்துக்கறீங்க...
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

"தங்கள் படைப்புகளையும் ஆஸ்திரேலிய அனுபவங்களையும் படிக்க ஆர்வம் உள்ளவனாக உள்ளேன்"

படைப்புகள் கொடுக்கற அளவுக்கு நாம ஒன்னும் எளக்கியவாதி இல்லபா...:-) பின்குறிப்ப படிக்கலையோ!

said...

//படைப்புகள் கொடுக்கற அளவுக்கு நாம ஒன்னும் எளக்கியவாதி இல்லபா...:-) பின்குறிப்ப படிக்கலையோ!//


எலக்கியமா எழுதுனாத் தான் 'படைப்பு'ன்னு சொல்லனுமாங்க? நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க. நீங்க எழுதுறது எல்லாம் உங்க படைப்பு என்ற அர்த்த்தில் தான் நான் சொன்னேன். அத்தோட எலக்கியத்த புரிஞ்சுக்கிட்டு பாராட்டற அளவுக்கு மசாலாவும் நம்ம மண்டையில கெடயாதுங்ணோவ். அப்பிடியே அந்த கல்லால அடி வாங்குற உண்மை என்னன்னும் கொஞ்சம் சொல்லுங்ணா.

[ கல்லு ரெடி பண்ணி வெச்சிக்கிட்டு தான் இந்த கேள்வி கேக்கறேன் :)- ]

said...

என்னவோய் இன்னைக்கு எதுவும் புதுசா டீ போடலியா....(21.03.2006)

ஆறுன டீயா இருக்கே

said...

கைப்புள்ள,

இந்த மாதிரி குண்டக்க மண்டக்க கேள்வி கேக்கப்படாது...புரிஞ்சிதா?:-)


முத்துக்குமரன்,

போட்டுட்டோம் ஓய்

said...

பொட்டி கடையில் பூச்சியெல்லாம், விக்கிதா? நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

johan -paris said...

பொட்டீக்கடைக்கு!
தங்கள், மின்மினிப் பூச்சி பற்றிய தகவலில், சில மேலதிக விபரம் தரவிரும்புகிறேன். இப்பூச்சியின் பெண்ணுக்கு மாத்திரம்,இவ்வொளிரும்;தன்மையுண்டு, அதுவும் இனப்பெருக்க காலத்தில்; ஆணைக் கவர இந்த மினுக்கு என உயிரியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.மழைகாலமே இவற்றின் இனப்பெருக்க காலம். தொடர்ந்து பறக்கும் ,இயல்புடையது.
அடுத்து,விட்டில் பூச்சியென்பது, கறையானின் ஒரு முதிர்பருவம், இதற்கு ஈசல், செட்டைக்கறையான் எனும் காரணப்பெயரும் உண்டு. இவை சில நிமிடங்களே பறக்கும் ஆற்றல் படைத்தவை. இவையும் மழை காலத்திலே காணப்படும். காரணம் மழை வெள்ளம் புற்றுனுள், புகுவது கூட ஒரு காரணம்.இதை நம் நாட்டுக் குறவர் இனமக்கள்,அமேசன், இந்தோனேசிய;ஆபிரிக்க காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் வேட்டை குறைந்த மழை காலத்தில்; புரதச்சத்துக்காக, தானியங்களுடன் வறுத்துண்பார்கள்.என அறிந்தேன்.
நன்றி
யோகன்
பாரிஸ்

said...

தகவலுக்கு நன்றி!
ஆண் மின்மினி தான் பெண் மின்மினியைக் கவர ஒளிக்கீற்றுகளை ஏற்படுத்தும் என்று நான் படித்திருக்கிறேன்...
***
அதை விடுத்து பொதுவாக ஆண் தானே (மிருகம் முதல் மனிதன் வரை) பெண்ணை வசீகரிக்க முயற்சித்திருக்கிறான். ;-))
***
//இதை நம் நாட்டுக் குறவர் இனமக்கள்,அமேசன், இந்தோனேசிய;ஆபிரிக்க காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் வேட்டை குறைந்த மழை காலத்தில்; புரதச்சத்துக்காக, தானியங்களுடன் வறுத்துண்பார்கள்.என அறிந்தேன்//

அப்போ நான் கூட குறவன் தானோ!:-)