6/26/2012

தாய்த்தமிழ்ப் பள்ளி, பிரிஸ்பேன்

  நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர் நணபர் முகுந்த். இணையத்தில் 2000ம் வருடத்தில் இருந்து புழங்கிவருபவர்கட்குஇகலப்பைமுகுந்த் என்றால் இன்னும் இலகுவாக இருக்கும். முகுந்த் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பும் ஆர்வமும் அனைவரும் அறிந்ததே. அவருடைய தமிழ்மொழி தொடர்பான மென்பொருள் மற்றும் இன்னபிற சேவைகளை அவர் எந்த ஒரு பொருளாதாயமும் இல்லாமல் செய்து வருவதும் அனைவரும் அறிந்ததே. அவர் இயங்கி வரும்தமிழாகுழும நண்பர்களுக்கும் அவருக்கும் எமது நன்றிகள்.

  முகுந்த் அவர்களை சென்னையிலும், புதுச்சேரியிலும் நடந்த வலைப்பதிவர் பட்டறையில் சந்தித்திருந்தாலும் அவர் 2010ல் பிரிஸ்பேன் நகரத்திற்கு குடிபெயர்ந்த பொழுது இன்னும் அதிகமாக அவரைப் பற்றியும் அவருடைய தமிழார்வமும் அறியவந்தது. அதன்பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பிரிஸ்பேன் நகர்வாழ் தமிழர்கட்கு எவ்வகையில் தமிழார்வத்தையும், வாசிக்கும் வழக்கத்தையும் உண்டாக்குவது என்று பேசி வந்திருக்கிறோம். அவ்வகையில் தமிழ் ப்ரிஸ்பேன் என்ற அமைப்பின் உதவியோடு 2010ம் ஆண்டு மவுண்ட் க்ராவட் நூலகத்தில் தமிழ் வலைப்பதிவு அறிமுகமும், பயிற்சிப் பட்டறையும் நடத்தினோம்.

  தன் தொடர்பிலும், முகுந்த்தின் தமிழார்வத்தையும் கண்டுகொண்டு சில தனியார் தன்னார்வ அமைப்புகள் முகுந்த்தை தன்னார்வல ஆசிரியராக இங்கிருக்கும் ஒரு அமைப்பு பயன்படுத்திக் கொள்ள முன்வந்தது. ஆனால் அவர்களுடைய சட்டதிட்டங்கள் முகுந்த் அவர்களின் சுயமரியாதைக்கும் அவர்தம் கொள்கைகளுக்கும் ஒத்துவராததாலும், அமைப்பாளர்களின் மனோபாவம் ஒத்துவராததாலும் தனியே ஒரு தன்னார்வ தமிழ்ப்பள்ளி அமைக்கலாம் என்று சில நண்பர்களுடனும், ஏற்கனவே அதிருப்தியிலிருந்த ஒரு சில பெற்றோருடனும் கலந்து பேசினார்.

  தனிடையே இவ்வாறாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஏற்கனவே இயங்கி வந்த அமைப்புகளும், பள்ளிகளும் மிகவும் அதிகளவிலான அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனாலும் மிக வலுவான மனநிலையோடிருந்த முகுந்த்தும், பெற்றோரும் புதிய தமிழ்ப்பள்ளி அமைத்தே தீரவேண்டுமென்ற உறுதியிலிருந்தனர். அதன் காரணமாக 2011 பொங்கல்புத்தாண்டன்று 2 மாணாக்கரோடும் 2 ஆசிரியத்தொண்டூழியர்களாலும் தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்று 22+ மாணாக்கர் வரை உயர்ந்துள்ளது. இவ்வருடம் இன்னும் 5-10 குழந்தைகள் பள்ளியில் சேருவார்களென எதிர்பார்க்கிறோம். இப்பள்ளி நிர்வாகம் அனைத்தும் தொண்டூழிய நண்பர்களால் நடத்தப்படுகிறது. கட்டிட வாடகைக்காக மட்டும் சொற்பமான அளவு நன்கொடை நிதி வசூலிக்கப்படுகிறது.

தாய்த்தமிழ்ப் பள்ளியின் வசதிகள்:

- சிறார்களின் வயதையொட்டியும், அவர்களுடைய தமிழ்ப்பேச்சுவழக்கையொட்டியும் மூன்று தனி வகுப்புகள். இதனால் ஒத்தவயதுடைய சிறார் ஒன்றாகமர்ந்து தமிழ் பழக வாய்ப்பு

- 1 ஆசிரியருக்கு 6 மாணாக்கர் என்ற விகிதம் இருப்பதால் அனைத்து சிறார்களுக்கும் சமமான அளவிலும், நிறைவான அளவிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

- வழக்கமான அ, ஆ, இ, ஈ ...க ஞ ச ந...என்ற வரிசையில் அல்லாமல் புலம்பெயர் சிறார்கட்கு எளிதாக புரியக்கூடிய எழுதிப்பழகக்கூடிய வகையில் அட்டைப்பயிற்சி முறை.

- interactive method...ஏட்டுச்சுரைக்காயாக இல்லாமல் ஒருவரோடு ஒருவர் உரையாடிப் பயிற்றுவிக்கும் peer interaction முறை.

- தமிழ்க்கல்வியோடு தமிழர் விளையாட்டு, தமிழ் பேச்சு, தமிழிசை, தமிழ் கிராமிய நடனங்கள்,  ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் பொருட்டு “தாய்த்தமிழ் இளந்தளிர் ஆண்டு விழா” இவ்வருடம் முதல் நடைபெற இருக்கிறது.

- தமிழ் நாட்டார் தெய்வங்களும், அது தொடர்பான கதைகளையும் அறிமுகப்படுத்தும் முறைமையும் கூடியவிரைவில் செயல்படுத்தப்படும்.


  பள்ளியின் பாடத்திட்டம் தாய்த்தமிழகத்தின் தமிழ் ஆர்வலரும், நடமாடும் நூலகமுமான பொள்ளாச்சிநசன்அவர்களின் மேற்பார்வையில் பெற்றோர் ஆசிரியத் தன்னார்வலர்கள், தொண்டூழியர்கள், அவர்களின் கூட்டான முயற்சியில் உருவாக்கப்பெற்றது. கடந்த மாதம் AHES,  LOTE (Languages other than English), குயின்ஸ்லாந்து மாநிலக் கல்வித்துறையால் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் மிக முக்கியமானதாகும். இதனால் மாணாக்கர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் பயிலும் தமிழ் மொழிக்கு, வழக்கமான அரசாங்கப் பள்ளியில் கிடைக்கக்கூடிய அதே மதிப்பெண்கள் கிடைக்கும். அதைப்பயன்படுத்தி பல்கலைக்கழகத்திலும் க்ரெடிட் எடுத்துக்கொள்ளலாம்.

  துவரை 25 ஆண்டு காலமாக இயங்கிவந்த பள்ளிகள் 8ம் வகுப்பு வரையே தமிழ்க்கல்வியும் பயிற்றுமுறையையும் நடைமுறைப்படுத்தி வந்துள்ளன. ஆனால் அண்டை மாநிலங்களான நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் 12ம் வகுப்பு வரை தமிழ்க்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது, மேலும் அங்குள்ள அரசாங்கப்பள்ளிகளிலும் தமிழ் பயிற்றுமொழியாகவுள்ளது. பெற்றோர், ஆசிரியத் தொண்டூழியர்கள் மற்றும் நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தாய்த்தமிழ்ப்பள்ளியில் இதுவரை 4ம் வகுப்புவரை பயிற்றுவிக்கப்படுகிறது. இது வளர்ந்து 12ம் வகுப்புவரை மாணாக்கர் சேர்க்கையும், குயின்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள அரசாங்கப் பள்ளிகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு வரவேண்டுமென்பதே பள்ளியின் அமைப்பினரது இலட்சியமாக இருக்கிறது. ஆர்வமோடு பங்குபெறும் சிறார்களும், அவர் தம் பெற்றோரும், ஆசிரியத்தொண்டூழியர்களும், வெளியில் இருந்து பல்வேறு வகையில் ஆதரவு தரும் நண்பர்களும் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறோம்.


  துமட்டுமல்லாமல், வயது வந்த ஆண்களும் பெண்களும் கூட நமது தாய்த்தமிழ்ப்பள்ளியில் தமிழ் வாசிக்க எழுதப் பழகலாமென தாய்த்தமிழ்ப் பள்ளி தன்னார்வல ஆசிரியர்கள் கூறுகிறார்கள். தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, மலேசிய, சிங்கப்பூர், நியுசிலாந்து ஆகியவற்றில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்காகவும் இந்தியாவின் அண்டை மாநிலங்களில் தமிழ் பழக முடியாமல் போனவர்களுக்காகவும் ஒரு வருட காலத்தில் எழுதிப்பழகி வாசிக்கும் வகையில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.


தமிழ் நூலகம்

  மேலும் பிரிஸ்பேன் நகர்வாழ் தமிழ்மக்களுக்காக சமகால இலக்கியங்களை வாசிக்கும் வகையில் குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்காக இந்நூலகம் நிறுவப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரவாழ் தமிழ்மக்கள் இதை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நூலகத்தில் சமகால தமிழிலக்கியங்களும், பண்டைய இலக்கியங்கள் எளிய வடிவிலும் கிடைக்கின்றன.

தாய்த் தமிழ்ப் பள்ளி நூலக இணையதளம் 
 
  வாசிக்கும் வழக்கம் அல்லது ஆர்வமிருப்பின் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மேற்கண்ட இணைப்பில் சென்று ஒரு பயனர் கணக்கை துவங்க வேண்டியது தான். பின்னர் நூற்பட்டியலுக்குச் சென்று எந்த புத்தகம் வேண்டுமோ அதை அழுத்தி முன்பதிவு செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் தாய்த்தமிழ்ப் பள்ளிக்குச் சென்று புத்தகத்தை எடுத்து செல்லலாம்.

புகைப்பட உதவி : Arul Photography 

2 comments:

said...

test

Anonymous said...

மிக அருமையான பதிவு. பள்ளி பற்றிய தகவல்களை சரியாக கொடுத்துள்ளீர்கள். வீட்டில் தாய்மொழி பேசவேண்டிய அவசியத்தையும் இதுபோல் ஒரு பதிவா போட்டீங்கன நன்றாக இருக்கும்.
சரளமான நடை..இன்னும் அந்த blogger உங்களுக்குள்ள இருக்குறாரு.,

நன்றிகளுடன்..
காரணன்.