Showing posts with label டார்ச்சர். Show all posts
Showing posts with label டார்ச்சர். Show all posts

8/29/2009

செந்நில மனிதனின் பாம்புக் கனவுகள் 1/18


இளையபிராயத்திலிருந்தே செம்மண், செந்நிறம், செஞ்சட்டை, குருதி, பாலூர், திருவ்ஹீந்தபுரம் தொடர்ச்சி மற்றும் இன்னபிற கெடிலம் ஆற்றிற்கப்பாலான அனைத்து செந்நில முந்திரிக்காடுகள் மீதான் காதல். சிறுவயதில் மிதிவண்டியில் தெங்கிழக்கே கேப்பர்மலை வரையிலும், பின்னர் பாலூர், திருவஹீந்தபுரம், வேல்ராம்பட்டு மற்றும் குடியிருப்பு வரையிலான மிதிவண்டிப் பயனங்களும் வாழ்வில் மறக்கமுடியாதவை. பின்னர் ஆரோவில்லின் செம்மண் குழிகளும், கால்வாய்களும், கஞ்சா குடித்த போதையில் ஆடிய கூடைப்பந்து தொடங்கி முந்திரி மரக்கூரைகளின் வழியே வழிந்தோடும் முழுநிலவொளியோடு ஆன்னா தொடங்க அலமேலு வரை வறையரை இல்லாமல் புணந்த இரவுகளோடு செந்நிலத்தின் காதல் உயிரோடு கலந்திருக்கின்றது. சிறுவயதில் வயல்வெளியில் மோட்டார் நிலையத்தின் கட்டுமாணத்தின் போது பயன்பட்ட செம்மண்ணைக் குழைத்து உடல் முழுதும் பூசி மெழுகி களத்துமேட்டின் மீதுலர்த்தி மோட்டார் மூலம் இறைத்த நீரில் உடலலசி சுய இன்பம் செய்து புலரும் நன்பகலில் கண்ணானின் மனைவி தாயார் கிழவி கூழோடு கடிச்ச வெங்காயத்தின் நெடி இன்னமும் செம்மண்ணின் வாசத்தையே உணர வைக்கிறது.

அன்று சலீமுக்கு சுன்னத். குறி நுனியை அறுத்து துர் தேவதையை வெளியேற்றும் வைபவம். சலீமிற்கு அப்போது 10 வயதிருக்கலாம். எனக்கு 11. சலீமின் அம்மா மிகவும் அழகானவள். தெருவின் அனைத்து ஆண்களும் புணர ஆசைப்பட்ட உடலது என் அப்பா, சித்தப்பா உட்பட. ஆனால பின்னொரு நாளில் அப்பா அவளை போடவில்லை என் என்னிடம் பொய்யும் சொல்லியுள்ளார். பாருங்கள்...குறி அறுத்த கதை சொல்ல வந்த நான் குறி எழும்பும் கதை சொல்லிப் போகிறேன். சலீமின் உறவினர்கள் இசுலாத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், தமிழ் மக்களோடு இரண்டறக்கலந்துவிட்டதால் அது ஒரு காது குத்தும் வைபவத்தைப் போலவே எனக்குத் தெரிந்தது. சலீமின் மாமாக்கள் முஸ்தபாவும், ஃபைசரும் சாம்பிராணி போட்டு அரிசியும் பருப்பும் பைசாவும் அன்பளிப்பாகக் கொண்டுவந்து ஜீவனம் நடத்துபவர்கள். அன்று என்னமோ தெரியவில்லை...அவர்கள் சாம்பிராணியின் சாம்பலை உடல் முழுதும் பூசி ஜால்ராவைத் உச்சஸ்தாயில் தட்டிக் கொண்டிருந்தார்கள். சலீமின் உடல் முழுதும் செம்மண் அப்பப்பட்டிருந்தது. நானும் அப்பிக்கொண்டேன் அவசியமில்லாத போதும். இன்னும் மூன்று பேர் இருந்தார்கள் அதில் ஐஸ்கார பாயும் சேட்டும் அடங்குவார்கள். அனைவரும் வெரும் கோவணம் மட்டுமே கட்டியிருந்தோம். செம்மண் அப்பி படுக்கவைக்கப்பட்டிருந்த சலீமை சுத்தி ஆடிக்கொண்டிருந்தோம். முஸ்தபாவும், ஃபைசரும் ஜால்ராவைத் தட்டிக்கொண்டிருந்தார்கள். முஸ்தபாவின் அப்பா கார்ட்டூனில் வரும் முல்லா நசிருதீன் போலிருப்பார். தலைப்பாகையும், பச்சைத் துண்டோடும் காட்சியளிப்பார். வெள்ளிக்கிழமைக் காலைகளிலும் மாலைகளிலும் கொத்பாபள்ளியின் பள்ளிவாசலில் துப்பு கொடுப்பார். அவர் துப்பு கொடுத்தால் துர் தேவதைகள் நம்மை விட்டு ஓடிவிடும் ஆமாம் நம்புங்கள். அந்த வயதில் எனக்குக் காரணமில்லாமல் விரைக்கும். துர் தேவதைகள் என்னை சல்லாபிக்க விரும்புவதாகவும் அதனால் எனக்கும் சுன்னத் செய்யவேண்டுமென்றும் சொல்லி துப்பும் கொடுத்தார். ஆனால் என்னுடைய ஆயா தாத்தா முனியாண்டியை கும்முடுவார்கள்...அதனால் பள்ளிவாசலில் அவர் துப்பு கொடுத்து சொன்னதை நம்பவில்லை. அவர்மட்டும் சலிமின் இடப்பக்கம் அமர்ந்து அவனது குறியைத் தூக்கி ஒரு செந்நிற துணியில் நிறுத்திக் கட்டுபோட்டபடியே ரஃபி ரஃபி இல்லல்லா என்று உச்சஸ்தாயில் பாடிக்கொண்டிருந்தார். சாம்பிராணியின் புகைசூழ்ந்து கூரை அமைக்க அதன் கீழ் நறுமண நாசியிலேற நாங்கள் ஆட ...சலீம் ஆவென் அலறியதில் கால்வாய்க்கு அந்தப்பக்கம் இருக்கும் யோவான் எழும்பிவிட்டார்.

அடுத்த நாளிரவு சலீமைப் பார்க்க நானும், அப்பாவும் சென்றோம். அம்மா இட்லி சுட்டுக் கொடுத்தனுப்பினாள். இப்போது சலீமும் நானும் மட்டும் அறையில் இருந்தோம். சலீமின் அம்மாவும் என்னுடைய அப்பாவும் சமையல்கட்டில் இருந்தார்கள். ச்லீமின் வீடு மிகவும் சிறியது. கதவைத்திறந்தால் தாழ்வாரம் அந்தப் பக்கம் மூலையில் சமையல்கட்டு. இந்தப் பக்கம் கதவில்லாத அறை அங்கு தான் சலீமின் குறி விரைத்த நிலையில் ஒரு செந்நிற ரிப்பனில் நிலைக்குத்தாக கட்டியிருந்தார்கள். ஈ அண்டாமல் விசிறிக்கொண்டிருந்த சலீமின் அம்மா அப்பாவோடு சமையற்கட்டில் ஒதுங்க நான் விசிறியை எடுத்துக் கொண்டேன். சமையற்கட்டில் சிரிப்பொலியும், வலையள்கள் குலுங்கும் சத்தம் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது சலீம் அவனுடைய வேல்கம்பைக் காட்டி முசல் பிடிக்க்ப் போலாமா என்று கேட்டான் என்னை. அவனது குறி விரைத்துக் கொண்டிருப்பதால் துர்தேவதைகள் அவனைப் புணர்ந்து கொண்டிருந்தன. மேலும் இன்னமும் பச்சை ரத்தம் கசிந்து கொண்டிருப்பதால் துர்தேவதைகள் மட்டுமல்லாமல் பாம்பும் அவனை அண்டி வருமென்பதாலும் அவன் இப்போது எதைத் தொட்டாலும் தீட்டென்பதாலும் நான் வேண்டாமென்றேன். அவன் ஒரு தேங்காய் சிரட்டையை எடுத்து அவனது குறி மற்றும் புடுக்கை மறைத்துக் கொண்டு இப்போ ஏதும் நம்மை அண்டாது நாம் போகலாமென்றான். இப்போது சமையற்கட்டில் கிறக்கமான முனகல் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

அருகில் இருப்பது முத்தையாவின் தோட்டம் மட்டுமே. முயல்களும், குள்ளநரிகளும், வாவியும், தேவாங்குகளும் அதிகமாய் இருக்கும் மரவள்ளிக்கிழங்கு தோட்டம். அங்கு ஒரு சுனைமரம் இருக்கிறது, எப்போது நீர் சுரந்துகொண்டிருக்கும் அதனுள்ளிருந்து. அதனுள் தான் இவர்கள் அனைவரும் இளைப்பாருவார்கள். அந்த சுனைமரத்தின் பெயர் காட்டுச்சுரக்காய் மரம். வாவி ஒரு கனவுப் பாம்பு. அவனை நான் இதுவரைக் கண்டதில்லை. ஆனால் பள்ளிவாசல் பாய் சொல்லுவார் வாவி தான் கால்வாயாய் நெளிந்து வளைந்து ஓடிக் கொண்டிருக்கிறானென்று. நான் எப்போதும் நம்பியதில்லை. சலீம் வேல்கம்பை எடுத்து மரத்தினடியில் குத்தினான். ஒரு தேவாங்கு மாட்டியது. சுட்டுத்திங்கலாமென்றான், வேண்டாமென்றேன். ஏனென்றால் சலீம் தீட்டுபிடித்தவன். அவன் கைபடும் எல்லாவற்றிலும் துர் தேவதைகள் குடிகொண்டிருக்கும். சலீம் கோபமடைந்தான். மறுபடியும் வேல்கம்பை குத்தினான், இப்போது செந்நிறக் காட்டுமுயல். சலீம் சந்தோசத்தில் குதித்தான். நீரை செந்நிலத்தில் குழைத்து உடலெல்லாம் பூசிக் கொண்டு திருமணச் சடங்கிற்கு தயாராகி விட்டதாகக் குதித்தான். ஆமாம், குறியறுப்பு சடங்கிற்குப் பின் ஒரு நன்னாளில் ஊர்ப்பெரியவர்களோடு நாங்கள் முயல் வேட்டைக்குச் செல்லவேண்டும். என்றைக்கு நாங்கள் வேல்கம்பால் முயலை வேட்டையாடுகிறோமோ அன்று நாங்கள் குடும்பப்பொறுப்பை ஏற்கத் தயாராகிவிட்டோமென்பதாக ஒரு நடைமுறை.

அது துர்தேவதைகளின் சதி இதை நாம் சுட்டு உண்ண இயலாது. வா...சென்றுவிடலாமென்று சொன்னேன்.

சலீமிற்கு வெறியேற்றிவிட்டன துர்தேவதைகள். மறுபடியும் நீரினுள் குத்தினான். வாலைமீன் அகப்பட்டதாக அரற்றினான். இந்நேரம் நான் வாவியின் நினைவில் மூழ்கியிருந்தேன். வாவியை அண்டாதே...கோபக்காரன் அவன் என்றேன்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....உ உ உ உ உ...ஊ ஊ ஊ ஊ ஊ...ய ய ய ய் ய ய ய் ய...அ அ அ அ அ...ஆஆஆஆ...என்றப் பாடியபடி வாவி வந்தான்...வாவியில்லை நீர் தான அலையெனப் பெருகி சலீமை உட்கொண்டது. ஓடினேன் கால்வாயை நோக்கி. சலீம் கதறினான்...அவனது அப்பாவை அழைத்துவரச் சொன்னான். நான் இங்கே இருக்கிறேன் என்றான். எங்கு என எனக்குத் தெரியவில்லை...அப்பா இப்போது முற்றத்திலிருந்தார். குளித்து முடித்திருந்தார்...ஆமாம் சலீமின் அம்மாவும் தான். இப்போது முன்னைவிட அழகாக இருந்தாள். கண்ணுக்கு மைதீட்டி இருந்தாள்.
அப்பாவிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு சலீமை நோக்கி மறுபடி ஓடினேன். சலீம், வாப்பா இங்கே இருக்கிறேன் என்ற குரல் மட்டும் எனக்கு கேட்க...நான் ஒரு இடத்தை தோண்டுகிறேன். இப்போது ஐஸ்கார் பாய் வருகிறார். அவர் தான் சலீமின் அப்பா என நினைக்கிற நேரத்தில் என்னுடைய அப்பாவும் வருகிறார். சலீம் இப்போது கால்வாய்க்கு அருகில் இருந்து கூச்சலிடுகிறான். ஐஸ்கார் பாயும், என்னுடைய அப்பாவும் மாறி மாறித் தோண்டுகிறார்கள் குரல் வந்த இடங்களிலெள்ளாம்.

பள்ளிவாசல் பாய் சொல்கிறார். சலீம் எமது சடங்கை மீறிவிட்டான். அவன் வாவிக்கே சொந்தம்.

கால்வாய் தான் வாவி
வாவி தான் கால்வாய்
கால்வாய் அது கால்வாய்
அல்ல காலத்தின் வாய்
காலுக்கும் வாய்க்கு இடைப்பட்டது
வாய் வழியே போகும் ஆனால்
காலின் வழியே வராது

திரும்பிப்பார்க்கிறேன் ஐஸ்கார பாயும் இல்லை, எனது அப்பாவுமில்லை. ஆனால் குழம்பினேன் சலீம் அவனது வாப்பாவை அழைத்த போது ஏன் என் அப்பாவும் வந்தாரென்று.